தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

Tuesday, May 1, 2012

என்ன தவம் செய்தேன்..

ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெறும் திரு வேல தனஞ்செயனாகிய 
 
என் அப்பாவை
கடவுளென்றுச் சொல்லி
நான் ஆத்தீகனாக விரும்பவில்லை..
காரணம்,
அக்கடவுள் கூட சில நேரம்
நான் கேட்டு இல்லை என்றதுண்டு..!

அவரை
சுமை தாங்கும்
தூணென்றுச் சொல்லி
உயிரற்ற அஃறிணைக்கு
ஒப்பிட விருப்பமில்லை..
அவர் மறைத்த வலிகளை
அவரது மெளனச் சிந்தனைகளிலும்
தூக்கமற்ற இரவுகளிலும்
சுண்ணக்கோலின் நெடி தாளாத தும்மல்களிலும்
குரல் கம்மித் தண்ணீருக்கு தவிக்கும் தருணங்களிலும்
கவனித்திருக்கிறேன்..!

அவர்
சிறந்த ஆசிரியராக இருக்கலாம்..
ஆனால் மாணவனாக பார்க்கும் போது
சராசரிக்கும் சற்று கீழேதான்..
பின்ன,
குள்ளநரித்தனங்களையும்
சூது வாதுகளையும்
கற்றுத் தேராமலே இன்று
ஆசிரியர் பணியை
நிறைவு செய்யப்போகிறாரே..!

கோழி மிதித்து
குஞ்சுகள் இறப்பதில்லை..
ஆம்,
இன்று கோழிகள்தாம்
குஞ்சுகளுக்கு அஞ்ச வேண்டியுள்ளது..!
வாத்தியாரை
“வாத்தி”யாக்கிவிட்டார்களே..!

இவரது வீட்டில்மட்டும்
உலகம் அரைமணி நேரம்
முன்னதாகத்தான் சுற்றும்..
கடிகாரத்தில்
இவர் பண்ணிவைக்கும் சேட்டையில்
வீட்டிற்கு வருபவர்கள்
குழம்பிப் போனதுதான் மிச்சம்..!

அவரை நான் செல்லமாக
“பெருச்சாளி” என்றழைப்பது வழக்கம்..
காரணம்,
என் முதலாம் வகுப்பு
குட்டைப்பாவாடை முதல்
நேற்று இரவு வாங்கிய
மளிகைப்பட்டியல் வரை
ஒன்றுவிடாமல்
எங்கள் வீட்டின் சந்து பொந்துகளில்
சேகரித்துள்ளார்..!

ஒரு காலத்தில்
தன்னை “தாத்தா” என்றழைக்காமலிருக்க
மிட்டாய் லஞ்சம் கொடுத்துக்கொண்டிருந்தவர்
இன்று,
“டேய் கிழவா! என்றென்னை எப்படா அழைக்கப்போற”
என்று தன் குறிஞ்சிப் பேத்தியிடம்
கணிப்பொறியின் முன் தவமிருக்கிறார்..!

என்னை வைத்து மேய்ப்பது
பத்தாதென்று,
தெருவில் சுற்றிக் கொண்டிருந்த
அப்பு குட்டியையும்
இவர் தலையில் கட்டிவிட்டேன்..
அவர் வீட்டைவிட்டு
ஒரு ஜான் நகர்ந்தால் போதும்,
ஊருக்கே கேட்கும்
அதன் ஊளைச் சத்தம்..!

கெட்ட வார்த்தை பேச நா கூசும்
நம்மூர் பெருசுகளுக்கு
“ஏம்பா! உனக்கு அம்பிள புள்ள இல்லையா!!”
என்று துக்கம் விசாரிக்கமட்டும்
உடம்பில் எந்த சுரணையுள்ள பகுதியும்
கூசியதில்லை..
அவர்களிடம்
இவர் அமைதியாய்
நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கூறுவது,
“ஆம்,
எனக்கு மூன்றும் பெண் பிள்ளைகள்தான்
என் மனைவியும் சேர்த்து..!”

அவரெனக்கு
அரணாய் அமைந்துவிட்டதினால்
அசாத்தியங்களும் அஸ்தமனங்களும்கூட
என்னை அண்டுவதற்கு அஞ்சி நிற்கின்றன..
என் தெருக்கோடியில் சுற்றிக் கொண்டிருக்கும்
அறுந்த வால்களும் சேர்த்தி..!

என்ன,
ஒரே ஒரு குறைதான்..
அவர் ஆசிரியராய் இருந்தும்
கஷ்டமெனும் பாடத்தில்மட்டும்
என்னை பூஜ்ஜியமாகவே
வளர்த்துவிட்டார்..

வாத்தியார் புள்ள மக்காம்..
இருக்கலாம்..
ஆனால்,
நான் இந்நேரம்
மக்கித்தான் போயிருப்பேன்
இந்த வாத்தியாரின்
செல்ல மகளாக
பிறவாமல் போயிருந்தால்!

Monday, April 9, 2012

அன்புள்ள அம்மாவுக்கு..


தவணை முத்தம் 2:
 


இரண்டாவது
பிறந்ததும்
பெண்ணென்று
ஊரில் எவரும்
என்னை
எட்டிக் கூட
பார்க்கவில்லை..

நான்
பத்தோடு
பதினொன்னாக
பிறந்திருந்தாலும்
உன்னுள்
ஊற்றெடுக்கும்
அமுதும் அன்பும்
ஒரு துளிகூட
குறைந்ததில்லை..!
அதற்கு..

Friday, March 30, 2012

ரசனைகள் பலவிதம்

விண்ணைத்தாண்டி
நான் வருகிறேன்..
முதல்காதலைத் தாண்டி
நீ வருகிறாய்
என்றால்..

வற்றிவிட்டதாய்
நீ நம்பிக்கொண்டிருக்கும்
உன் இதயத்தில்
ஒரு துளி
ஈரம் கூடவா
எனக்கு மிச்சமில்லை..

மொளனம் பேசியதாய்
நினைத்துக்கொண்டு
எனக்கு நானே
தப்பான அர்த்தம்
கண்டுவிட்டேனோ..!

தென்மேற்கில்
மையம் கொண்ட
பருவக்காற்றுக்கு
ஏனோ
மழைத்தர
இன்றும் மனமில்லை..

தெருத்தெருவாகத்
அங்காடியில்
தேடிக் கொண்டிருக்கிறேன்
நீ உசிரையே
வைத்திருப்பாதாய் சொன்ன
அந்த சிறுபொம்மையை..

அரவமேயின்றி
என் மனதின்
சந்து பொந்துகள்
அனைத்திலும்
ஊடுருவும்
அரவாணே..

வாகை சூட
வருகிறேன்
உன்னுடன் சேர்ந்து
வாழ்வை
ஆட்சி புரிவதாயின்..

அலைப்பாய்கின்ற
மனதை
கட்டுப்படுத்திவிடத்தான்
தவிக்கிறேன்..

உனது அறியாமை
எனது இயலாமைக்கு
அஞ்சலி
செலுத்தும் முன்..!

Saturday, March 17, 2012

அன்புள்ள அம்மாவுக்கு..


தவணை முத்தம் 1 :






நீ லேசாய்
பட்டும் படாமலும்
ஒரு தட்டு தட்டியதற்கு
ஒன்பது மணிநேரம்
உண்ணாவிரதம்
நடித்திருக்கிறேன்..

நீயோ
நான் முதன்முதலில்
கருவில் உன்னை
எட்டி உதைத்ததற்கு
ஊர்க்கூட்டி
ஆர்ப்பரித்தாயே
அதற்கு..!

Tuesday, March 13, 2012

அவ(ள்)ன்


ஒரு பெண்ணிடம் ஆணின் குணங்கள் கண்டால்
1000-ல் ஒருத்தி என்கிறார்கள்..
ஏனோ,
ஒரு ஆணாக அறியப்பட்டவனிடம்
பெண்ணின் குணங்கள் கண்டால் மட்டும்
10-ல் ஒன்றை கழி என்கிறார்கள்..
கூட்டிக் கழித்தும் பார்த்துவிட்டேன்
கணக்கு சரியாக வரவில்லையே!

தாயோ தாரமோ வீரம் கொண்டால்
அதில் பூரிப்பு..
தகப்பனோ தமயனோ தாய்ப்பாசம் தந்தால்
அதில் பேருவப்பு..
இயற்கையாய் ‘இவர்’கள் நளினம் கொண்டால்மட்டும்
அதில் அருவருப்பு..
உட்கார்ந்து யோசித்தாலும்
இப்புதிர் எனக்கு விளங்கவில்லையே!

Tuesday, March 6, 2012

பொம்மலாட்டம்


விவரம் தெரிந்தது முதல்
அம்மா சொல்லிச் சொல்லி வளர்க்கிறாள்
“என்னதான் நீ
நம்ம வீட்டு செல்லமா இருந்தாலும்
இன்னொருத்தர் வீட்டுல வாக்கப்பட போரவ” னு..

என் நலம் கருதும்
தோழி சொல்லி வருந்துகிறாள்,
“என்னாதான் நீ
ஆண் பெண் பேதம் பாக்காம பழகினாலும்
புருஷனுக்குப் பிடிக்காட்டி விட்டுத்தான் ஆகணும்”னு..

திரையிலும் வெட்டிப்பேச்சுகளிலும்
பெண்ணுரிமைப்பற்றிச் சிலாகிக்கும் கணவர்கள்
நான்குச் சுவர்களுக்குள் குசுகுசுப்பது,
“என்னதான் நீ படிச்சு கிழிச்சி வேலைக்கு போனாலும்
வீட்டுல நா சொல்றதத்தான் கேட்டாகணும்”னு..

தாயின் பாச பலவீனமறிந்த
கில்லாடிப் பிள்ளைகள் உறுதிக்கூறுவது,
“என்னதான் அம்மா முதல்ல முரண்டுபுடிச்சாலும்
போகப்போக நம்ம காதல ஏத்துக்குவாங்க” னு..

ஒவ்வொரு முறையும்
தன் மனசாட்சிக்கு
அவள் கூறிக்கொள்ளும் ஆறுதல் ஒன்றுதான்.
“என்னதான் நீ வாழப்பிறந்தவளாயினும்
நீ ஆடித்தான் ஆகவேண்டும்
பொம்மலாட்டம்”னு..!

Tuesday, February 14, 2012

கேட்டீகளா


ஆத்தீ..
எங்குட்டு போய் சொல்ல
இந்த கூத்த..

அடுத்த சென்மத்துலயாவது
ஆம்பிளையா
பொறக்கணுமாமில்ல..

ஏன்னு கேட்டதுக்கு,
அவ சொன்னத கேட்டியா..

“அப்பவாச்சும்,
அவன்மேல இப்டி
அப்பட்டமா ஆச வக்காம
இருப்பேனுல்ல” ங்குறா..!

Friday, February 10, 2012

பாரபட்சம்


ஏன் இந்த பாரபட்சம்..

நாம் செய்த தவறு விதி
பிறர் செய்த பிழை சதி?

உடல்நலக் குறைவு அரவணைப்பு
மனநலக் குறைவு நிராகரிப்பு?

செயற்கை மார்பகங்கள் பிரமாதம்
செயற்கை கால்கள் ஐயோ பாவம்?

ஜாதகம் சேராமல் இரத்தாகும் சம்பந்தம் கெளரவம்
மனம் ஒப்பாமல் பிரியும் பந்தங்கள் அநாகரிகம்?

அதிகம் படித்த மாப்பிள்ளை extra மதிப்பு
அதிகம் படித்த மணப்பெண் extra வசூலிப்பு?

நீ ஈன்றெடுத்த பிள்ளையின் குறும்புகள் வரம்
உன்னை ஈன்றோரின்
இரண்டாம் குழந்தைப்பருவம் பாரம்?

Thursday, February 2, 2012

பல்லாங்குழி


நான் என்றோ மனதிற்குள்
பல்லாங்குழியாட ஆசைப்பட்டது,
இப்பொழுதுதானா          
இந்த “பொறுப்பு பொன்னுசாமிகளின்”
காதுகளில் விழுந்து வைக்கணும்
இப்படி என்னைத் திகட்ட திகட்ட
பல்லாங்குழி ஆட வைத்துவிட்டார்களே,
இவர்களின் வாக்கு தவறாமைக்கு எடுத்துக்காட்டான
எங்கள் ஊர் சாலைகளில்..!!

Monday, January 30, 2012

உற்றுப்பாரடி..


ஒன்றுசேர்த்து விட்டதாய்
மார்தட்டிக் கொண்டிருக்கிறேன்,
என் இதயம்
வெட்கமற்று காட்டிக் கொண்டிருப்பது
உடைத்தவனின் பிம்பத்தை
என்று அறியாமல்..!

Sunday, January 29, 2012

வணக்கமுங்க!


             இந்த வலைப்பூ இன்று இங்கு பூப்பதற்கு ஊக்கமெனும் நீரூற்றிய அனைத்து பாசக்கார உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி. வெறும் கண்ணாமூச்சி விளையாட்டிற்காக எழுத ஆரம்பித்தேன். ஆட்டத்தின் முடிவில் நான் கண்டுபிடித்தது, எனக்குள் உறைந்துபோய்க் கிடந்த தமிழ்த் தாகத்தை.
             எழுத வேண்டுமென்ற ஆசை மட்டும்தான். வலைப்பூ தொடங்குவதில் அவ்வளவாக நாட்டமில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமானால் துணிவில்லையென்று தான் கூற வேண்டும். காரணம், நான் எட்டிப்பார்த்த பூந்தோட்டங்களில் பூத்திருந்த வலைப்பூக்கள் பெரும்பான்மையாக எஜமானர்களுக்கு சொந்தமானவையே. ஆகவே, இங்கே எஜமானிக்கள் வெகுக்குறைவுதானென்று நானே முடிவுகட்டி, நமக்கெதுக்கு வீண்வம்பென்று இருந்துவிட்டேன். அப்புறம், இந்த தேன்சிட்டு எப்படி வந்தாளென்று தானே யோசிக்கிறீர்கள். (சரி, சரி நீங்க ஸ்ஸ்ஸபா-ங்குறது எனக்கும் கேட்கிறது. சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்.)
               என் வருடலுக்கெட்டிய முதல் வலைப்பூ மயிலிறகு” தான்.cmayilan.blogspot (இதன்மேல் தட்டுங்கள்,திறக்கப்படும்). இதற்குமுன், மழைக்காகக் கூட நான் கவிதைக்குடைகளுக்குள் ஒதுங்கியதில்லை. மாருத்துவ மேற்படிப்பு நுழைவுத்தேர்வுகளுக்காக புத்தகப்புழுவாகிக் காய்ந்துபோய்க்கிடந்த எனக்கு, மயிலிறகின் படைப்புகள் கம்மஞ்சோலைப்போலத்தான் ஆகிவிட்டது.
             மயிலிறகின் பார்வை மூலம் மற்ற வலைப்பூக்கலையும் ரசிக்கலானேன். படிக்கத் தூண்டியதுடன் நில்லாமல், எழுதும் ஆவலையும் கிளப்பிவிட்டது. இப்படியாக என் கண்ணில் பட்டதுதான் “தெங்காசித் தமிழ்ப் பைங்கிளி” thenkasi thamizh paingiliயின் வலைப்பூ. எஜமானிக்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை ஒரு பக்கம் உரைக்க, நாமும் ஒரு வலைப்பூ தொடங்கித்தான் பார்ப்போமே என்ற குறுகுறுப்பும் தொற்றிக்கொண்டது. என்னைக் கவர்ந்த இவ்விரு பூக்களும் சிறகாடையில் வலம்வருவதைக்கண்டு, என் மனப்பட்சிக்கும் அவ்வாசை வந்துவிட்டது. நமக்கு எந்தப் பட்சி சரிவருமென்று யோசித்தேன். என் தாத்தா எனக்கு வைத்த செல்லப்பெயரான “தேன்மொழி”யுடன், ஏறக்குறைய என்னைப்போலவேயிருக்கும் சிட்டையும் (ஹி.. ஹி..) சேர்த்து, “தேன்சிட்டு” ஆக்கிவிட்டேன்.
              இதுவே, தேன்சிட்டு தமிழ்த்தேன் பருக ஆரம்பித்ததின் கதைச்சுருக்கம். நான் தமிழ்வெறியை அல்ல, தமிழ்ப்பிரியை மட்டுமே. எனக்குத் தெரிந்த எளியத் தமிழில், இந்த சிட்டின் கண்ணோட்டத்தை பகிர்ந்து கொ(ல்)ள்கிறேன்.
              இப்படி என்னை உசுப்பேத்தி ரணகளத்தில்விட்டு புண்ணியம் (அல்லது பாவமோ, முடிவெடுப்பது உங்கள் பாடு) கட்டிக்கொண்ட அனைவருக்கும் (நான் ஒரு ‘க்’கிற்கு புள்ளிவைப்பதைக்கூட ஆஹா ஓஹோவென்று பாராட்டும் என் பெற்றோரும் சேர்த்தி) வணக்கம் கூறி, என்னுடன் சேர்ந்து தமிழ்த்தேன் பருகிச் சிறகடிக்க வரவேற்கின்றேன்.

Wednesday, January 25, 2012

எனக்கும் சற்று நேரம் ஒதுக்கு

என் இதழோர மச்சம்
கண்டு ரசித்தாய்..
கன்னக் குழியில்
சறுக்கி விளையாடினாய்..
அலைக் கூந்தலில்
நீந்தி மகிழ்ந்தாய்..
அன்பின் கதகதப்பில்
கரைந்து உருகினாய்..
இதற்கே உனக்கு நேரம்
சரியாக இருக்க,
கவனிக்கத் தோன்றவில்லை போலும்
எனக்குள் நித்தமும் மறுகிக் கொண்டிருக்கும்
“சராசரி” என்னை..!!!

நினைவுப் பரிசு


மறையவில்லை இன்னும்
அவன் அறைந்த கையின் ரேகைகள்..

உலரவில்லை இன்னும்
இவள் கன்னத்தில் கண்ணீர்க் கோடுகள்..

வெளிவரவில்லை இன்னும்
அவன் இவள் கருவில் விட்டுச்சென்ற
எட்டு மாத இரட்டை சிசுக்கள்..

அதற்குள்,
பறித்தாகிவிட்டது
இவளது பூவையும் பொட்டையும்..

உடைத்தாகிவிட்டது
கைகளில் சிணுங்கும் வளையல்களை..

கொடுத்தாகிவிட்டது
விதவை எனும் பட்டத்தை..

அன்றுதான் போய்ச் சேர்ந்துவிட்டிருந்த
குடிகாரக் கணவனின் ஞாபகமாக
இச்சமுதாயம் அவளுக்குத் தரும்
நினைவுப் பரிசு..!!!

சொல்லிவிடு..


வானத்து நிலாவென்றது
தொலைவில் வைத்து ரசிக்கத்தானா..

சிற்பிக்குள் முத்தென்றது
பூட்டி வைத்து பூஜிக்கத்தானா..

கல் சிற்பமென்றது
உனதாசைக்கேற்ப எனை செதுக்கத்தானா..

அழகோவியம் என்றது
உன் தீண்டலில் சிவந்த தேகத்தை தானா..

காதலித்தேன் என்றது
நானென்று நீ நினைத்துக்கொண்ட
உன் கற்பனையைத்தானா..!

யாரைக் குற்றஞ்சொல்வது..


அசைந்தாடிக் கொண்டிருந்தாள்
அழகிய நாணலாய்..
வருடிக் கொண்டு வந்தான்
மென் தென்றலாய்..
அவள் வளைந்தாடியதை ரசித்தான்
சில காலம்..
எவ்வளவுதான் வளைகிறாள் பார்ப்போமென்று
வளைத்துப்பார்த்தான் போலும்..
எல்லை மீறி ஆட்டுவித்ததில்
வேருடன் சரிந்துவிட்டாள் அவள்..
இன்று,         
உயிறற்றுக் கிடக்கும் “வெற்றுக் குச்சி”க்கு
மனமுருகி மழைக்காக வேண்டுகிறான்,
அவளை மீண்டும் துளிர்க்க வைக்கும்
நப்பாசையில்!!!
ஹிம்ம்ம்.. கண்கெட்ட பின்
சூர்ய தரிசனம்!!!

நுழைவுக்கட்டணம்


உன் நினைவுகளின்
திடீர் ஆக்கிரமிப்பின் விளைவு..
எனது ‘அச்சம் மடம் நாணம்’ அனைத்தும்
முறுக்கிக்கொண்டு வெளிநடப்பு செய்துவிட்டன..
எஞ்சியிருந்த நம்பிக்கை ஒன்றும்
உன் அலட்சியப் புன்னகையால்
இன்று அவசர சிகிச்சை பிரிவில்..
நியாயம் கேட்க
உன் மனம் தேடி வந்தால்,
என்னைத் துறந்த ‘அவற்றை’ கேட்கின்றாய்,
நுழைவுக்கட்டணமாய்!

அது இது எது


ஆசைக்கு தாத்தா பாட்டி
வச்ச பேரு..

இராசிக்கு ஆத்தா அப்பன்
வச்ச பேரு..

சேட்டைக்கு உடன்பிறப்புகள்
வச்ச பேரு..

கேலிக்கு நண்பர்கள்
வச்ச பேரு..

இங்கிதம் கருதி அக்கம் பக்கத்துல
வச்ச பேரு..

இதெல்லாம் பத்தாதென்று
அவன் பேர துணைப்பெயராக சேர்த்துக்க
இதுக்கு ஆசைய பாரு..

ஒரு வேள,
இதுக்கு பேரு தான் அதுவோ..!!!

Tuesday, January 24, 2012

அவளால் முடிந்தது


பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி

ஆனாலும்,
இவள் ஆறுதல் தேடியதில்லை
மதுவிலோ போதையிலோ..

இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை
மாப்ள-மச்சான் நண்பர்களிடத்தில்...

இவள் சோகத்தை மறந்ததில்லை
கானா மெட்டுக்கள் பாடி..

இவள் பழி சுமத்தியதில்லை
ஒட்டுமொத்த ஆண்கள் வர்க்கமே மோசமென்று..

இவள் கவனிக்கத் தவறியதில்லை
கேட்கக் கூசும் விமர்சனங்களை..


இவளுக்கு தெரிந்தது, முடிந்தது,
அனுமதிக்கப்பட்டது
எல்லாம் வெறும்
“தலையணை நனைத்தல்” மட்டுமே...!!!